Sunday 7 May 2017

ஆசைமுகம் மறந்து போச்சே

துறவறம் பூணுவோருக்கு, அத்தனையும் துறப்பதற்கான பக்குவமும் காரணமும் இருக்கும். அப்படிப்பட்ட பக்குவமில்லாத பதின்மவயதில், துறவறத்திற்கு இணையானதொரு தியாகம் செய்ய நிர்பந்திக்கும் கசப்பான அனுபவமான காதலை துறத்தலென்ற படியை
இந்தியன் கடந்தே ஆக வேண்டும்.

சாதகங்கள் தான் குறைவேயொழிய தடைகளுக்கொன்றும் குறைவேயில்லை. சாதி, பொருளாதார வேறுபாடு, மதம், இப்படி ஏதேனும் ஓர் உடையிட்டு தடை வந்தே தீரும்.

*******************************************
ஆசைமுகம் மறந்து போச்சே 
இதை யாரிடம் சொல்வேனடி தோழி 
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் 
நினைவுமுகம் மறக்கலாமோ...? 
கண்ணில் தெரியுதொரு தோற்றம் -அதில் 
கண்ணன் அழகு முழுதில்லை... 
நன்னமுகவடிவு காணில் -அந்த 
நல்லவள சிரிப்பை காணோம். 
கண்ணன் முகம் மறந்துபோனால் -இந்த 
கண்களிருந்து பயனுண்டோ...? 
வண்ண படமுமில்லை கண்டாய் -இனி
வாழும் வழியென்னடி தோழி...? 
                                -பாரதியார் 
********************************************

அதற்காக, ஆசைமுகம் மறந்தா போய்விடும் என்று கேட்பீர்களாயின், ஆம் என்பதே எனது பதிலாகவிருக்கும்.

வெளிப்படுத்தப்பட்ட காதல்கள், 
பின்னாளில் கொச்சைபடுத்தப்படலாம்; 
உள்ளத்தில் உறைந்தவை, புனிதம் இழப்பதுண்டோ...? 
அப்படிப்பட்ட காதல், எவரை தான் விட்டுவைத்தது...?

சரியாக 3 வருடம் தினமும் பார்த்துக்கொள்வோம்,
பார்க்க மட்டுமே செய்வோம்.
(படிக்கிற உங்களுக்கு மட்டுமில்ல, எழுதுறபோது சம்மந்தப்பட்ட எனக்கே சிரிப்பு தான் வருது)
காலையில் இருமுறை,
மதியம் மூன்றுமுறை,
சாயங்காலம் இருமுறை,
எதிர்படவும் புதிர்படவும் செய்வோம்.

பேரு வேணாம்...
பேர்ல என்ன இருக்கு...
இப்ப பேர் மட்டுமே இருக்கு 

24 செகன்ட் நான்கு விழிகளும் புனைவுரும், பின் விலகும்...
விழிகள் சொல்லமுடியாததையா,
உதடுகள் சொல்லிவிடப்போகிறதென இறுமாப்பு இருவருக்கும்.
விழிகள் வார்த்த காவியங்களும்
கண்கள்கூடிய ஓவியங்களும்
ஜீவனுள்ளவரை ஜீவித்தேவிருக்கும் சிரஞ்சீவியாய்...

என் பெயர்,
அவளை திரும்ப வைத்ததும் உண்டு
சிலமுறை புன்முறுவல் அரும்ப வைத்ததும் உண்டு...

அவளெழுதிய Testpaper திருத்தும் பாக்கியம் கிடைத்தது, RA sir மூலம்...
அதிலொரு தாளின் ஓரம், அவள் கைகளால் அவளே வரைந்த ஓவியமொன்றை கிழித்து பர்ஸிற்குள் வைத்திருந்தேன். அவ்வோவியம் அவளின் பெயரென உள்ளம் உணரவே 4 வருடம் அவசியமாயிற்று. அந்த துண்டுகாகிதம் ஒருமுறை எனது அக்கா கண்ணில்பட்டுவிட்டபோது, பதிலேதுமில்லாததால் கேள்வியம்பு பாயாதிருக்க தூக்கியெறிந்தேன். பின்பு தேடி கிடைக்கவேயில்லை... அவள் நினைவாயிருந்த ஒற்றை objectம் பறிபோயிற்று.

பிப்ரவரி 14, 2002 அன்று, நண்பர்களின் வற்புறுத்தலால் காதலை சொல்ல gate தாண்டி குதித்தேன். RM sir, பார்த்துவிட்டார்.
பேனா விழுந்துவிட்டதென சமாளித்தேன்.

"உண்மையில் விழுந்தது, பேனா அல்ல...
ரதியோடு எழுதப்படவிருந்த விதி"