Wednesday 15 April 2020

இனிப்பு -காதலின் சுவை



வனது அக்காவின் தோழிகள் அனைவரும், அவனை 'தம்பி' என்று அழைத்தாலும் மகிழினி மட்டும் "ஒளி! ஒளி!" என்று தான் அழைப்பாள். ஒளியனது அக்கா, இவனை விட 2 வயது மூத்தவள். இவன் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, மதிய உணவு பெட்டியை கொடுக்க வந்த இவனது அக்காவோடு மகிழினி வந்தாள்.
"இவன் தான் என் தம்பி ஒளியன். இவன் தான் க்ளாஸ்லயே பர்ஸ்ட்." என்றாள் அக்கா.
"இவ என் ப்ரன்டு மகிழினி. ஒன்ன பாக்கனும்னுச்சு, அதான் அழச்சிட்டு வந்தேன். சாயந்திரம், டியூசன் முடிஞ்சி வர லேட்டாச்சுன்னா புரோட்டா சாப்புட்டுட்டு வர சொன்னிச்சு, அம்மா. இந்தா காசு!" என்று கூறி பணத்தை ஒளியனின் கையில் திணித்தாள், அக்கா. மகிழினி, நளினம் கலந்த உடல்மொழியோடு bye சொன்னது, இவனது விழித்திரையை விட்டு அகல மறுத்தது. 

அதன் பிறகு, இவனுக்கு அக்கா மீதான பாசம் பள்ளிக்கூடம் வந்தால், அதிகரிக்கத் தொடங்கியது. அடிக்கடி அக்காவை பார்க்க செல்வான். இல்லை, அக்காவை பார்க்க செல்வதாய் கூறி, மகிழினியை பார்க்கவே செல்வான்.
ஒருநாள், மதியஉணவு பெட்டியோடு இன்னொரு சிறிய பெட்டி வந்தது. மகிழினியின் பெற்றோருக்கு திருமணநாளாம், அவள் சமைத்த கேசரி . மகிழினி கொடுத்த, முதல் இனிப்பு. 

மகிழினியை அக்காவென்று அழைக்காமல் இருப்பதற்கான காரணங்கள், கூடிக்கொண்டே போனது. ஒருமுறை வராண்டாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த இவனது காது மடலை, ஒரு கை மிருதுவாய் வருடியது. "ஒளி! ரொம்ப படிக்காதடா! மூளை உருகி காது வழியா வந்துருமாம்" என்று குறுநகையை காற்றில் சிதறவிட்டு சென்றாள், மகிழினி.
"உன் தம்பி காது, செம்ம பொசுபொசுன்னு இருக்குடி" என்றாள், மகிழினி.
"இதுவரைக்கும் நாங்கூட தொட்டு பாத்ததில்ல." என்றாள், அவனது அக்கா.
அந்த பெண்கள் கூட்டம் கலகலத்தது.

ஒருநாள் மல்லிகைப்பூவை அடுக்கி சரமாக கோர்த்துக் கொண்டிருந்த அக்கா, "மகிழினி, நம்மூட்டுல மல்லிகைப்பூச்செடி இருக்குன்னு தெரிஞ்சதும், பூ கட்டிக் கொண்டு வர சொல்லி கெஞ்ச ஆரம்பிச்சிட்டா! தெனமும் பூ வாங்கி வச்சிட்டு வர முடியுமா! அதான், அவளுக்கும் சேத்து கட்டிட்டுருக்கேன்" என அம்மாவிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

'அக்கா தினமும் பூ கட்டி கொடுக்க சோம்பேறித்தனம் படுவாள்' என்பதை நன்கு அறிந்த ஒளியன், பூ கட்டக் கற்றுக்கொண்டு, தினமும் சாயங்காலம் காயரும்பு பறித்து எவரும் அறியாமல் பூக்களை கட்டி சரம் செய்து வாழையிலையில் வைத்து மடித்து கொண்டு போய், மகிழினியின் வகுப்பறையில் அமரும் இடத்தில் வைத்துவிடுவான். அந்த பூச்சரத்தினை முதல்முறை பார்த்த போது சூடத் தயங்கி, கருகவிட்டாள். பின்னர், அது தொடரவே, இது ஒளியனின் வேலை தான் எனப் புரிந்துகொண்டு சூடத் தொடங்கினாள்.

"மகிழினியக்கா, பாயசம் கொடுத்து விட்டுச்சுடா, இந்தா!" என உணவுப்பெட்டி ஒன்றை நீட்டினாள், அக்கா. "மகிழினிய எனக்கு அக்காவாக்குறாங்களாமாம்" என மனதில் எண்ணிக் கொண்டே, பாயசத்தை சுவைத்தான் ஒளியன். பாதாம், முந்திரியெல்லாம் இட்டு, இது அவனுக்கென்றே சிறப்பாக உண்டாக்கப்பட்ட பாயாசம் என்பதை எண்ணி, புன்முறுவல் பூத்தான் ஒளியன். மகிழினி தந்த இரண்டாவது இனிப்பு.

ஒளியனின் அக்கா வகுப்பில் உள்ள அனைவரும், கேரளாவிற்கு சுற்றுலா சென்றிருந்தனர். மகிழினி சுற்றுலா செல்லவில்லை என்பது, அவளை பள்ளியில் பார்த்த போது தான் தெரிந்தது.
"டூர் போவலயா?" என்று கேட்டான் ஒளியன்.
"இல்லை. இன்ட்ரஸ்ட் இல்லடா" என்றாள், அவள்.
"கேரளா அருமையான அழகான இடமாச்சே. போயிருக்கலாம்ல. மிஸ் பண்ணிட்டிங்க!" என்றான்.
"நம்ம ஹனிமூன் போயிக்கலாம் விடு!" என்றாள், வெகுஇயல்பாக.
"என்னது, நம்மளா?"
"அதான். நீ உன் புருசனோட. நான் என் பொண்டாட்டியோட.... ச்சீ... நீ உன் பொண்டாட்டியோட, நான் என் புருசனோட..." என்றாள், மகிழினி.
"ஏன் ஒளர்றிங்க! எப்பவும் தெளிவா தானே பேசுவிங்க! என்ன சொல்ல வர்றீங்க? தெளிவா சொல்லுங்க! உங்க கிளாஸ் பொண்ணுங்கல்லாம், என்னை தம்பின்னு கூப்பிடுவாங்க. நீங்க அப்படி கூப்பிட்டதே இல்லை. மல்லிகைப்பூ தெனமும் நான் தான் வச்சிட்டு போறேன்னு தெரிஞ்சி தான வச்சிக்குறிங்க!" என்று கேட்டான், ஒளியன்.
"இப்படில்லாம் பேசிவியா நீ? ரொம்ப வெவரமா பேசுறதா நெனப்போ? இப்ப என்ன, உன்ன தம்பின்னு கூப்டனுமா?" என்று கேட்டாள், மகிழினி.
"இல்லல்ல..." என்று வேகமாக தலையசைத்தான், அவன்.
அதற்குள், சுற்றுலா செல்லாத மற்றவர்கள் வகுப்பிற்கு வரத் தொடங்கினர்.
"சாயந்தரம், போன் பண்றேன். போ!" என்று கூறி, அவன் கிளம்பும் நேரம் வந்ததை உணர்த்தினாள், மகிழினி.

எதோவொரு புத்துயிர் உள்ளே புகுந்து கொண்டதைப் போல் உணர்ந்தான், ஒளியன். அவளது வகுப்பை விட்டு நிதானமாக வெளியேறினான். 'எவ்வளவு அசால்ட்டா சொல்லுது, நம்ம ஹனிமூன் போயிக்கலாமுன்னு... முடிவே பண்ணிருச்சோ!. எப்படி வீட்ல ஒத்துப்பாங்க. ரெண்டு வயசு கூடவாச்சே. எது எப்படியோ, பல நாளா கேக்கனும்னு நெனச்சதெல்லாம் கேட்டாச்சு. அதுக்கு என்னை புடிக்கும்னு தெரியும். தம்பியா புடிக்குமோன்னு ஒரு கொழப்பம். அது தெளிவாயிருச்சு. என்ன நடந்தாலும், இத விட்டுறக் கூடாது.' என்ற எண்ணம் அந்த நாள் முழுவதும் அவனை சூழ்ந்து கொண்டது.

சாயங்காலம் பயிற்சிவகுப்பிற்கு செல்லாமல், வீட்டிற்கு வந்தான். தொலைபேசி இயங்குவதை உறுதி செய்துகொண்டு, அதன் அருகிலேயே புத்தகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்தான். ஒரு மணிநேரம் ஆகியும் அழைப்பு வரவில்லை. இவனாக அழைக்கவும் பயம். அவளது தந்தை எடுத்துவிட்டால், கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்துவிடுவார்.

6.30 மணிக்கு மேல் தொலைபேசி சினுங்கியது. வேகமாக எடுத்தான்.
"டியூசன் போயிட்டு வந்துட்டியா?"
"இல்லை. இன்னைக்கு போகல."
"ஏன் போகல?"
"உங்க போன் வரும்னு தான்"
"நீ டியூசன் முடிச்சிட்டு வர லேட்டாகும்னு தான், இப்ப கூப்பிட்டேன். தெரிஞ்சிருந்தா முன்னாடியே பண்ணிருப்பேனே! நீ போனடிக்க வேண்டியது தானடா?"
"அதெல்லாம் விடுங்க. சொல்லுங்க!"
"என்ன சொல்லுனும்?"
"காலைல கேட்டேனே!"
"என்ன கேட்டே?"
"ஓயாம கேக்க முடியாது. கடுப்பேத்தாதிங்க!"
"ஓ சாருக்கு கோவம்லாம் வருமோ?"
"சொல்லுங்க!"
"இதுக்கு மேல, என்னடா சொல்லனும்? ட்யூப்லைட்டா நீ?"
"என்னை உங்களுக்கு புடிக்கும்னு தெரியும். என்னவா புடிக்கும்னு புரியல"
"ஏன்டா? என்னவான்னா, தம்பியா புடிக்குமான்னு கேக்குறியா? லூசு! தம்பி கூடவா ஹனிமூன் போவாங்க?"
"எப்படி முடியும்னு தான் புரியல"
"ஆம்பள மாதிரி பேசுடா! அதெல்லாம் முடியும். சச்சின் கூட 5 வயசு மூத்த பொண்ண தான், காதலிச்சு கல்யாணம் பண்ணினாராம்.
டேய், மல்லிகைப்பூ கட்டி கொண்டாந்து வைக்க தெரியும். ஸ்டிக்கர் பொட்டு உள்ளே வச்சு கொடுக்க தெரியும். எப்படி முடியும்னு யோசிச்சா, செஞ்சே? கவிதைலாம் எழுதுவே போல"
"நான் கவிதை எழுதுவேன்னு யார் சொன்னா?"
"ம்ம்... DD newsல சொன்னாங்க!"
"அக்கா சொன்னிச்சா?"
"தெரியுதுல்ல. உன்னோட முதல் கவிதை 'விதவைகளின் கண்கள் விடியலுக்காக' கூட என்கிட்ட இருக்கு" என்றாள்.
"அப்படியா?"
"ஓவரா நடிக்காத! நீ கவிதை எழுதுன டைரிய ஃபுல்லா படிச்சிருக்கேன். ரெண்டு நாள் எங்க வீட்டுலயே வச்சி படிச்சேன். அது இருக்கட்டும். 
எப்ப, நீ என்ன மொததடவை பாத்தே?" என்று கேட்டாள்.
"அன்னைக்கு சாப்பாடு கொடுக்க எங்கக்காவோட வந்திங்களே, அப்ப தான்!" என்றான்.
"நீ ஹைஸ்கூல்ல ஆறாவது சேந்த போதே, உன்னை நான் பாத்துருக்கேன். பால்வடியுற மொகமா இருக்கும். இப்ப கொஞ்சம் மீசையெல்லாம் மொளச்சிருக்கு. நீ சைக்கிள் கத்துகிட்டது, ஆறாவது கோடை லீவுல கவிதை எழுத ஆரம்பிச்சது, உனக்கு வைசூரி பாத்தது. உன்னை நாய் கடிச்சது, ஐயனார் கோவில் பூசைல நீ சரக்கடிச்சிட்டு வந்து, வீட்டுல வாந்தி எடுத்தது. எல்லாமே எனக்கு தெரியும். உன் அக்காவுக்கு அதான வேலை, எந்நேரமும் உன்னைப் பத்தியே தான் பேசிட்டுருக்கும்" என்றாள்.
"என்னங்க நீங்க, என்னை பக்கத்துல இருந்து பாத்த மாதிரி சொல்றிங்க!" என்று கேட்டான்.
"நான், உன் பக்கத்துல இருந்து தான் பாத்தேன். எப்பவும் உன் பக்கத்துலயே தான் இருப்பேன். சத்தியமாடா! நீ வேண்ணா பாரேன்!"
ரொம்ப ஆச்சரியமா இருக்கு"
"இன்னும் நெறய ஆச்சரியம்லாம் இருக்கு! இதுக்கே இப்படி சொல்றியே!" என்றாள்.
"வேற என்ன இருக்கு, சொல்லுங்க!"
"வேணாம் விடு, உன்னோட பேசனும்குறதுக்காக தான் உன் அக்காவோட சாப்பாடு கொடுக்க வந்தேன். கவிதைலாம் அருமையா எழுதுறே. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஆயக்காரன்புலம் ஒரு வைரமுத்துவை வளத்துட்டு இருக்கு" என்றாள்.
"ரொம்ப புகழாதிங்க! நான் சும்மா எதோ எழுதிட்டு இருக்கேன். கவிதைல்லாம் நம்ம ஆசைக்கு எழுதுறது தான். அதுலயெல்லாம் சம்பாதிக்க முடியாது. நான் கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்கப் போறேன். அது தான், என் ஆம்பிஷன்." என்றான்.
"அது ஆம்பிஷன் இல்லடா! ஆசைன்னு சொல்லு. ஆம்பிஷன்னா இலக்கு, அது பெருசா இருக்கனும். சரி ஒங்கிட்ட பேசினா நேரம் போறதே தெரியாது. நான் மாவரைக்கனும். நாளைக்கு சீக்கிரம் வா, பள்ளிக்கூடத்துல பேசிக்கலாம்." என்று முடித்தாள்.
"சரி நாளைக்கு பாப்போம். கட் பண்றேன். Bye."
"bye டா ஒளி!" என்று சினுங்கி விடைபெற்றாள்.


"இவங்க என்னை ரொம்ப நாளா கவனிச்சிட்டு இருக்காங்களோ! கவிதை எழுதினதுல நடந்த உருப்படியான விசயம், இது தான் போ! கவிதை எல்லாத்தையும்னா, அந்த 'முதலிரவு மூச்சு'ம் படிச்சிருப்பாங்களோ!" என்ற எண்ணங்கள், ஒளியனின் மனதில் ஓடின.

அவனது அக்கா சுற்றுலா சென்றிருந்த மூன்று நாட்களில் மகிழினிக்கும் அவனுக்குமான உறவு, மிக நெருக்கமாக மாறிப் போனது.

அந்த 3 நாட்களில், மகிழினி பகிர்ந்து கொண்ட விடயங்கள் ஒளியனின் மூச்சுள்ளவரை நினைவில் நிற்பவைகளாக இருந்தன. அந்த 3 நாட்களும் இனிப்பினை சமைத்து, கொண்டுவந்து தந்தாள். ஒருநாள் கேரட் அல்வா, மறுநாள் அசோகா, மறுநாள் கேசரி.

ஒவ்வொரு கவிதை வரிகளையும் உயிர் உருக பாராட்டுவது - அத்தனை கவிதைகளையும் மனதில் பதிய வைத்துக் கொண்டு, தேவையான இடங்களில் கூறுவது - தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்து, முழுமையாக புரிந்து கொண்டது - எந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டாலும், "நீ இப்படி சொல்லிருப்பியே! நீ இப்படி செஞ்சிருப்பியே" என்று மிகச்சரியாக கூறுவது, இன்னும் ஆயிரம் இருந்தன, மகிழினியை அவன் மனதார காதலிப்பதற்கான காரணங்கள்.
பள்ளிப்படிப்பை முடித்து, அவள் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் 'மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல்' சேர்ந்தாள். வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொலைபேசி ஒலித்தால், அது மகிழினியின் அழைப்பாகவே இருக்கும். வாரமொருமுறை தவறாமல் அழைப்பாள். 

ஒளியன் பள்ளிப்படிப்பை முடித்து, காஞ்சிபுரம் அருள்மிகு மீனாட்சியம்மன் பொறியியற் கல்லூரியில் வேதியியற் பொறியியல் படிப்பில் சேர்ந்தான்.
தோழிகள் வீட்டிற்கு சென்னை வருவதாக இருந்தால், ஒளியனிடம் முன்பே அறிவித்துவிடுவாள். சிலமுறை சென்னை மெரினா கடற்கரையில் சந்தித்து கொண்டதுண்டு. 

ஒருமுறை, அவளோடும் அவள் தோழிகளோடும் சேர்ந்து, மகாபலிபுரம் சென்றான். மகாபலிபுரம் சென்று திரும்பும் போது, பேருந்தில் இவனது இருக்கையில் அமர்ந்தாள், அவள். முதன்முறையாக அவளது கை இவனது கையோடு உரசியது. அவளது உடலின் வெப்பம், ஒளியனது குருதியை கொதிநிலை அடைய வைத்தது. அவள் பேசுவதை கேட்டுக் கொண்டே, அவளை அருகிலிருந்து ரசித்த அந்த பயணம், ஒளியனின் நினைவுகளில் பொன்னேட்டில் பொறிக்கப்பட்டது.

மகிழினி குடும்பப்பாங்கான பெண், அவளது மேலுதட்டிற்கு மேலே பூனைமுடி போல முடிகள், அழகாக அரும்பியிருக்கும். மீசை என்று தோழிகள், கிண்டல் செய்வர். மகிழினியின் கண்கள், உயிரோட்டமானவை. அவளின் கண்கள் அவளது உணர்வுகளை, அழகாக கடத்தும் தகவமைப்பை பெற்றிருந்தன. அளவான முன்மலர்கள், அத்திப்பழ நிறத்தில் சிவந்து விரிந்த உதடுகள், மாநிறமான தோல். ஒல்லியான உடற்கட்டு. ஒளியனின் கவிதைகள், முழுவதுமாய் மகிழினியால் நிறைந்தன.

மகிழினி பொறியியல் படிப்பை முடித்ததுமே, அவளை திருமணம் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. இவளும், கூடிவந்த பல வரன்களை நிராகரித்து வந்தாள். ஒளியனுக்கு பலமுறை, அலைபேசியில் அழைத்து அழுதுகொண்டே பகிர்ந்து கொள்வாள். இவனும் தன்னால் சொல்ல முடிந்த ஆறுதலை சொல்வான். இவனோடு பேசிக்கொண்டே உறங்கிப் போவாள். அவளிடமிருந்து தினமும் காலையில் ஒரு வணக்கம் கூறும் பட செய்தி(picture message) குறுஞ்செய்தியாக வரும், இரவும் ஒன்று வரும்.
மாலைநேரங்கள், முழுமையாக மகிழினிக்கென அர்ப்பணிக்கப்படும். அலைபேசி அறிமுகமான காலம், அது. 1100 என்ற நோக்கியாவின் அலைபேசி, மிக பிரபலம்.

ஒளியனும் பொறியியல் படிப்பை முடித்து, சென்னையில் ஒரு வேதியியற் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தான். மகிழினி, இரண்டு முறை தோழியின் திருமணத்திற்கென சென்னை வந்தாள். சென்னை வந்த போது, அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அண்ணா திரையரங்கில் "பூ" "அபியும் நானும்" திரைப்படங்கள், அவளோடு சேர்ந்து பாத்திருக்கிறான். 

திரையரங்கில், இவனது கையை பிடித்துக் கொண்டு எதாவது பேசிக் கொண்டே இருப்பாள். படத்தில் வரும் கதையோ காட்சிகளோ, இருவருக்கும் தெரியாது. மெல்லிய வெளிச்சத்தில் சன்னமான குரலில் அவள் பேசுவதே, ஒளியன் காணும் திரைக்காவியம்.

சென்னை மெரினா கடற்கரையில் ஒரு மாலைப்பொழுதில் சந்தித்து, 2 மணிநேரமாக பேசிக் கொண்டிருந்த பொன்னாள், ஒளியனுக்கு என்றும் மறக்க முடியாததாக இருந்தது. அன்று, காற்றில் நளினத்தோடு அசைந்த கூந்தலை அடிக்கடி கோதிவிட்டு கோதையவள் மொழிந்த சொற்கள், ஒளியனின் உயிர்முடிச்சில் உறைந்தன. "எனக்கு சம்மந்தம் பாத்துட்டு இருக்காங்கடா! நான் உன்ன பத்தி அம்மாகிட்ட சொன்னேன்.
'ஒன்னை விட மூத்தவங்க யாரும் கெடக்கலயா? சின்னப்பயல புடிச்சி ஒனக்கு கட்டிவைச்சா, ஊரு சிரிக்காது. ஒம்பொண்ணுக்கென்ன அவ்ளோ அலைச்சலான்னு கேக்கமாட்டாங்க? இதுனால தான் வர்ற சம்மந்தத்தைலாம் வேணாங்குறியா? இந்தேரு! எனக்கு நீ ஒரே பொண்ணு. உன்னை எந்த மாதிரி மாப்ளைக்கு கட்டிவைக்கனும், எப்படில்லாம் சீர்சனத்தி செய்யனும், எப்படி கல்யாணம் செய்யனும்னு அப்பா நெறைய ஆசாசையா சொல்லிட்டுருப்பாவொ!
அப்பா ஒடைஞ்சிருவாரு, பாத்துக்க!'னு சொன்னுச்சு, அம்மா.
அத கேட்டதுலருந்து ஒன்ன எழந்துருவனோன்ற பயம் வந்துருச்சுடா! எங்க அப்பாம்மா விருப்பத்துக்காக, ஒன்ன என்னோட கடைசிமூச்சு வரைக்கும் பக்கத்துல இருந்து பாக்கனுங்குற என் ஆசைய, எப்படிறா விடுறது?
ஒங்கூட பேச ஆரமிக்கிறதுக்கு முன்னாடியே, ஒன்ன பாக்குறதுல கெடைக்கிற சந்தோசம், வேறெதுலயும் கெடைக்காது. பேசிப் பழகி, ஒனக்கும் என்னை புடிக்குங்குறது தெரிஞ்ச பிறகு, நீ இல்லாத வாழ்க்கைய நெனச்சு பாக்கவே முடியல. ஒருவேளை உன்ன கட்டிக்க சம்மதிக்கலன்னா, கல்யாணமே வேண்டாம்னு வீட்லயே இருந்துருவேன். உன்ன போறப்ப வர்றப்ப பாத்துகிட்டு நீ எப்படி வாழுறங்குறத தெரிஞ்சிகிட்டு வாழுற வாழ்க்கை கூட, எனக்கு ஓகே தான்டா " என்று அழுதாள்.
கண்ணைத் துடைத்துக் கொண்டே,
"8 வருசமா என்னோட பேசிட்டுருக்க, ஒங்கிட்ட என்னை வாடிப்போடின்னு கூப்புடுன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன். அப்பலேர்ந்து வாங்கப்போங்கன்னு தான் கூப்பிடுறே!" என்று கேட்டாள்.
"ஒங்கல அப்படி கூப்புட வாய் வரமாட்டேங்குது." என்றான்.
"ஒளி! ப்ளீஸ் ஒரேயொரு தடவை 'டி' போட்டு பேசுடா"
"டீ சாப்புட்டுகிட்டே பேசலாமே!" என்றான்.
சிரிக்கிறாள்....
"என் கண்ணீரை தொடைக்க ஆயிரம் பேர் வரலாம். ஆனா அதை சிரிப்பா மாத்த, ஒளியால மட்டும் தான் முடியும்." என்று கூறிக்கொண்டே அவள் பார்த்த பார்வை, ஒளியன் கண்ட ஆகச்சிறந்த காணொளி.
"சரி அந்த டீ வண்டிய கூப்பிடு!" என்றாள்.
இருவரும் தேநீர் அருந்தினர்.
"அப்புறம் டீக்கு அப்புறம் ஒண்ணு கேக்குமே" என்று கேட்டாள்.
"என்னது?" என்று அப்பாவியாக கேட்டான்.
"பொக..." என்றாள்.
"ஐயயோ! அதெல்லாம் அடிக்க மாட்டேன்." என்றான்.
"டேய்! கோழிக்கட பக்கம் எத்தனை தடவை நான் பாத்துருக்கேன். எங்கிட்டயே பொய் சொல்றியா? ஸ்கூல் படிச்சப்ப உன் உதடு எப்படி இருந்துச்சு, இப்ப எப்படி இருக்குன்னு, பாக்குற எனக்கு தெரியாது" என்று கேட்டாள்.
"............." முழிக்கிறான் ஒளியன்.
சிறிதுநேரம், கா(த)லாற கடற்கரை மணலில் நடந்தார்கள். பின்னர், மகிழினியை பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு, ஒளியன் திருவல்லிக்கேணியிலிருக்கும் தனது அறையை நோக்கி நடந்தான்.

அந்த சந்திப்பிற்கு பின், பல இரவுகள் உறங்காமலேயே விடிந்தன. உறங்காமல் இருந்த இரவில், விடியற்காலை 4 மணி ஆனதும் நாளேடு வாங்க Ss music building வரை நடந்து செல்வான். காதில் ஒலிப்பானை மாட்டிக்கொண்டு, விடியற்காலையில் மாநகர வீதியில் நடப்பதே தனி சுகம் தான். அந்நாளின் வியாபார வேட்டைக்கு பரபரப்பாக ஆயத்தமாகும், பாரதியார் சாலை - big Street - வாலாஜா சாலை - Cnk சாலை - பெல்ஸ் ரோடு -கண்ணகி சாலை - இவைகளெல்லாம் மகிழினியின் நினைவுகளோடு ஒளியன் நடந்த சாலைகள். சில மாலைநேரங்கள், மெரினா கடற்கரையில் தாங்கள் சந்தித்து பேசிய இடத்தில் தனியே அமர்ந்து கொண்டு கடலை வெறித்து பார்த்துக் கொண்டு, இளையராஜா இசையில் மூழ்கி இனியவளின் நினைவில் இனிமை கண்டுகொண்டு இருப்பான், ஒளியன்.

2009ம் ஆண்டில், மகிழினியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அவளது அலைபேசி, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஊருக்கு சென்ற போது, அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதாக அறியப் பெற்றான். மெல்ல மெல்ல மனதை திடப்படுத்திக் கொண்டு, காலமெனும் நீரோடையில் கரைந்து போனான்.


திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்த பின், சௌதி அரேபியாவில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம் என்பதால், சௌதி வேலையில் சேர அணியமானான். 

4 வருடங்கள் அரேபிய அடிமை வாழ்வு முடிந்த பிறகு, வேலையை துறந்து ஊருக்குத் திரும்பினான். 4 வருடங்களில், 28 நாட்கள் விடுமுறையில் 3 முறை வந்திருக்கிறான். அயல்நாட்டு அடிமை வாழ்வே வேண்டாம் என்ற முடிவோடு, இந்தமுறை ஊருக்கு செல்வது, புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.

10 வருடங்களாக பகையாகிக் கிடக்கும் உறவுகளோடு இணைய வேண்டும் என்ற முடிவினை பல மாதங்கள் முன்பே எடுத்திருந்தாலும், இம்முறை ஊருக்கு வந்து இருந்த போது தான், அதற்கான நேரம் கைகூடியது. 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஐயனார் கோவிலுக்கு குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது, அதனை பகைபட்டு நிற்கும் ஊரக்காரர்களோடு இணையும் வாய்ப்பாகப் பயன்படுத்த எண்ணி, குடமுழுக்கு வேலைகளில் தீவிரமாக இறங்கி பணி செய்தான்.
ஊர்க்காரர்கள் அனைவரும், இவனது எண்ணத்தைப் புரிந்து கொண்டவர்களாக நெருங்கிப் பழகத் தொடங்கினர். 

ஐயனார் கோவில் குடமுழுக்கில், கும்பத்திற்கு அருகில் நின்றபடி கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் கண்கள் கடத்திய காட்சியை, அவனது மனம் ஏற்க மறுத்தது. தனது தூரத்து சொந்தமான அத்தான் மணந்திருப்பது, மகிழினியை.

"எழில் அத்தான், இவளயா கல்யாணம் பண்ணியிருக்காரு! இத்தனை நாள், எப்படி தெரியாமப் போச்சு. ஊருக்கு வந்திருந்தப்ப பாத்ததே இல்லயே. எதுவும் விசேசத்துல கூட, இவங்க நம்ம கண்ணுலய படலயே! எப்படி?
அதுசரி, அவரோட பேசி ராசியா இருந்தா, கல்யாணத்துக்கு போயிருப்போம். அப்பவே தெரிஞ்சிருக்கும். நாம 10 வருடசம் கழிச்சு, இப்ப தான ராசியாயிருக்கோம். அடப்பாவிகளா, இத்தனை நாள் தெரியாம போச்சே! தெரிஞ்சிருந்தா மட்டும், என்ன பண்ணியிருக்கப் போறோம்? நம்மளால அவங்க வாழ்க்கைல எந்த இடையூறும் வந்துறக் கூடாது. அத்தான் கூட பேசினாலும், ஒரு எல்லையோட வச்சிக்குவோம். அதான், எல்லாருக்கும் நல்லது. ஆமா, இப்ப நமக்கு மகிழினி அக்கா மொறையாச்சே! மகிழினிய அக்கான்னு கூப்பிட வைக்க, எத்தன பேரு ஆசைப்பட்டிங்கடா! இந்தா, அக்காவாவே ஆயிட்டாடா!" என்ற எண்ணங்கள் மனதில் ஓடின.


ஒளியனது மகன் விண்ணவன், ராட்டின ஊஞ்சல் ஆட ஆசைப்பட்டதால், அவனை ராட்டின ஊஞ்சலில் ஏற்றிவிட்டான். அவனது பெட்டியில் இன்னும் மூவர் ஏறினால் தான் முழுமையடையும் என்பதால், காத்திருந்தான். எழிலனது குடும்பம் வந்தது.
"என்னத்தான் இங்க நிக்கிறிங்க? அன்னதானம் போடுற எடத்துல ஆளு இருக்கா?" என்றார் எழிலன்.
"அங்க பந்தில இருக்க ஆள விட, பரிமாறுற ஆளுங்க தான், அதிகமா இருக்கு அத்தான்" என்று கூறி சிரித்தபடியே மகிழினியை பார்த்தான். அவளது கண்கள், இவன் மீது படவேயில்லை.
"ராட்டின ஊஞ்சல் ஆடலயா மாப்ள? விண்ணவனோட ஏறி ஒக்காருங்களேன்" என்று எழிலனின் குழந்தைகளை அழைத்தான், ஒளியன். அவர்களும் இசைவு தர, தனது மகனின் பெட்டி முழுமையடைந்து ராட்டினம் ஆடத் துவங்கியது.
"ஐஸ்கிரீம் சாப்புடுவோமா அத்தான்!" என்றார் எழிலன்.
"சளி புடிச்சிக்கும். நீங்க வேணும்னா சாப்புடுங்க, நான் வாங்கிட்டு வர்றேன்." என்றான் ஒளியன்.
"ஒனக்கு வேணுமா?" என்று தனது மனைவியை எழிலன் கேட்க, தனது மனைவி இனிப்பு சாப்பிடமாட்டாள் என்பது சட்டென நினைவுக்கு வர,
"மகிக்கும் ஒங்களுக்கும் பானிபூரி வாங்கிட்டு வர்றேன். நீங்க 2 ஐஸ்கிரீம் வாங்கிட்டு வாங்கத்தான்!" என்று நகர்ந்தார், எழிலன்.
2 குளிர்குழைமங்களை ஒளியன் வாங்கிவந்து கொடுத்தான்.
"எதுல வந்தீங்க?" என்று கேட்டார், எழிலன்.
"ஆட்டோல தான் அத்தான்" என்றான் ஒளியன்.
"சொல்லியிருந்தா, கார்ல அழச்சிட்டு வர சொல்லிருப்பேன்ல. காலைல 10, 15 தடவை ட்ரிப் அடிச்சிதே எங்கூட்டு காரு!"
"பரவால்லத்தான்." என்றான் ஒளியன். 

"அதுக்கில்ல. மகி போவனும்குறா. இந்த டிரைவர் எங்க போனான்னு தெரியல. போனடிச்சா எடுக்க மாட்றான். நீங்க வேணும்னா யாழினியையும் இதையும் கொண்ட விட்டுட்டு வந்துருங்களேன். நம்ம அப்பறமா போயிப்போம்" என கேட்டார், எழிலன்.
"சரித்தான். யாழினியும் போவனும்னு தான் சொல்லிட்டுருந்துச்சு. அப்ப புள்ளைவொல பாத்துக்குங்க. நான் போயிட்டு வந்துடுறேன்" என்று புறப்பட ஆயத்தமானான் ஒளியன்.

மகிழுந்தின் முன் இருக்கையில் இவனது மனைவி யாழினி அமர, பின் இருக்கையில் மகிழினி அமர்ந்தாள். பயணத்தின் போது, தனது மனைவியும் மகிழினியும் பேசிக்கொண்டு சென்றனர். அதன் பின்னர், கோவிலுக்கு திரும்பி குழந்தைகளையும் எழிலனையும் ஏற்றிக் கொண்டு வந்தான். குழந்தைகளை வீட்டில் இறக்கிவிட்டு, எழிலனும் ஒளியனும் மதுவருந்தி மகிழ ஆயக்காரன்புலம் கடைத்தெரு புறப்பட்டனர். எழிலனுடான உறவும் நெருக்கமும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

அதற்கு பிறகு, ஒட்டுநர் இல்லாத நேரங்களில் எழிலனின் மகிழுந்து ஒளியனது கைக்கு வரும்.

ஒருநாள், மகிழுந்து திறப்பானை வாங்க எழிலனின் வீட்டிற்கு சென்ற போது, திறப்பானோடு, ஒரு கடிதத்தைக் கொடுத்தாள், எழிலனின் மனைவி.

"அன்புத்தம்பிக்கு வணக்கம்!
தாங்கள், எழிலனின் மனைவியிடம் உங்களது பழைய காதலியின் உருவத்தைக் கண்டு குழம்பியிருக்க வாய்ப்பு உள்ளது.
உங்களது காதலி, உங்களை மணக்க முடியாத துயரத்தையும் உங்களிடம் விதைத்த நம்பிக்கையை நிறைவேற்ற முடியாத குற்றவுணர்வையும், தாங்கிக்கொள்ள முடியாமல், 2009ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டாள்.
தாங்கள் அவளது நினைவு நாளை கருப்புநாளாக அனுசரிக்க விரும்பினால், எழிலனது திருமணநாளை அவளது நினைவுநாளாக அனுசரிக்கலாம்.
அந்த நாளில், அவரிடமிருந்து இனிப்பு ஏதேனும் வழங்கப்படும். அசௌகரீகத்திற்கு மன்னிக்க வேண்டும். அந்த இனிப்பு, அவரது மனைவி என்னால் சமைக்கப்பட்டதாக இருக்கும்."